நவம்பர் 28,2025
சபரிமலை; எருமேலியில் இருந்து பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்கள் 500 பேருக்கு தினமும் ஸ்பாட் புக்கிங் கூப்பன் வழங்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது; அனுமதிக்கப்படாத காட்டுப்பாதைகள் வழி பக்தர்கள் வருவதை தவிர்க்க வேண்டும், இப்படிப்பட்ட பாதைகளில் பக்தர்கள் வரவில்லை என்பதை போலீஸ் உறுதிப்படுத்தும். தற்போது சபரிமலை சீசன் மகிழ்ச்சிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. போலீஸ் சிறப்பாக கூட்டத்தை நிர்வகிக்கிறது. இன்னும் சில நாட்களில் இது மேலும் சிறப்பாகும் என்று நம்புகிறோம். பக்தர்கள் வருகையில் எந்த குறைவும் இல்லை. தேவையான அரவணை ஸ்டாக் உள்ளது. ஆன்லைன் முன்பதிவு கிடைக்காமல் பெருவழிப்பாதை வழியாகவரும் பக்தர்களுக்காக முக்குழியில் தினமும் 500 பேருக்கு ஸ்பாட் புக்கிங் பாஸ் வழங்கப்படும். இதை பெறும் பக்தர்கள் வழக்கமான பாதையில் மட்டுமே பயணித்து பம்பை வந்து சன்னிதானத்துக்கு செல்ல வேண்டும். சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் அன்னதானத்தில் மதியம் பாயாசத்துடன் கூடிய விருந்து வழங்கும் திட்டம் டிச., 2 முதல் தொடங்கும். சோறு, பருப்பு. சாம்பார், அவியல், துவரன், பப்படம், ஊறுகாய், பாயாசம் என குறைந்தபட்சம் ஏழு வகை உணவுகள் இருக்கும். பகல் 12.00 முதல் 3.00 மணி வரை இது வழங்கப்படும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பாயாசம் உண்டு. ஸ்டீல் பிளேட்,கப்புகள் இதற்காக பயன்படுத்தப்படும். சபரிமலை வரும் ஒவ்வொரு பக்தரையும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிசீலிக்கிறது என்பதன் அடையாளமாக தான் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த சமீபனம் சபரிமலையின் மற்ற எல்லா விஷயங்களும் பிரதிபலிக்கும் என்று கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.