சபரிமலையில் எரிமேலி பேட்டை துள்ளல் நிறைவு: இன்று முதல் சன்னிதானத்தில் சுத்தி கிரியைகள்

ஜனவரி 12,2026



சபரிமலை; எருமேலியில் நேற்று நடைபெற்ற அம்பலப்புழா - ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாபரணம் இன்று பந்தளத்தில் இருந்து புறப்படும் நிலையில் சபரிமலையில் சுத்திகிரியைகள் இன்று தொடங்குகிறது.


சபரிமலையில் மகரஜோதி தரிசனம் 14-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் நடைபெறும் அம்பலப்புழா -ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நேற்று நடைபெற்றது. பகல் 12:30 மணிக்கு ஆகாயத்தில் வட்டமிட்டு பறந்த கருடனை கண்டதும் எருமேலி பேட்டை சாஸ்தா கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட யானையுடன் அம்பலப்புழா பக்தர்கள் பேட்டை துள்ளி புறப்பட்டனர். இவர்கள் வாவர் பள்ளிவாசலை வலம் வந்த பின்னர் பேட்டை துள்ளியபடி எருமேலி பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்தனர். இதுபோல மாலை 3:00 மணிக்கு ஆகாயத்தில் ஒளிவிட்டு பிரகாசித்த நட்சத்திரத்தை கண்டதும் ஆலங்காடு பக்தர்கள் குழுவினர் பேட்டை துள்ளி பெரிய சாஸ்தா கோயிலில் நிறைவு செய்தனர். சுவாமி திந்தகத்தோம்... ஐயப்ப திந்தகத்தோம் என்ற கோஷத்தால் எருமேலி நேற்று திணறியது .பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இந்த பேட்டை துள்ளலில் கலந்து கொண்டனர். இந்த பேட்டை துள்ளலுடன் எருமேலியில் பேட்டை துள்ளல் நிறைவு பெற்றது. பந்தளத்திலிருந்து திருவாபரண பவனி இன்று மதியம் 1:00 மணிக்கு புறப்படுகிறது. பந்தளம் அரண்மனையில் உள்ள திருவாபரணங்கள் இன்று அதிகாலை முதல் பந்தளம் சாஸ்தா கோயிலில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படும். பகல் 12:30 மணிக்கு உச்ச பூஜை நடைபெற்றதும் பேடகங்கள் அடைக்கப்பட்டு தலை சுமடாக பவனியாக புறப்படும். இது 14 -ம் தேதி மாலை சன்னிதானம் வந்தடையும். மகரஜோதிக்கு முன்னோடியாக சபரிமலை சன்னிதானத்தில் நடைபெறும் சுத்தி கிரியைகள் இன்று தொடங்குகிறது. மாலை 6.30 மணிக்கு தீபாராதனைக்கு பின்னர் பிராசாத சுத்தி பூஜைகளை தந்திரி மகேஷ் மோகனரரு நடத்துவார். நாளை மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக பிம்பசுத்தி பூஜைகள் நடைபெறும்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்