உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்குள் 23 சவரன் சுவாமி நகை திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா மிக விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 14ம் தேதி சித்திரை திருவிழா சாகை வார்த்தலுடன் விழா துவங்கியது. வரும் 28ம் தேதி இரவு சுவாமி திருக்கண் திறப்பு நிகழ்ச்சியும், திருநங்கைகள் (அரவாணிகள்) பக்தர்கள் பூசாரிகளின் கையால் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர். 29ம் தேதி காலை 6.30 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி இன்று காலை 7 மணியளவில் கோவில் பூசாரியான கூத்தையன் 60, அவரது மகன் சரத்குமார் 30 ஆகியோர் பூஜைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் காலை 8.30 மணிக்கு வந்து பார்த்தபோது. மூலவர் சிலையில் இருந்த 23 சவரன் நகை திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் மூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் சிவகாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான பக்தர்கள். திருநங்கைகள் லட்சக்கணக்கில் பணம், ஏராளமான நகைகளை காணிக்கையாக செலுத்த உள்ள நிலையில் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சுவாமி நகை திருட்டு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.