Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
  English Version
அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஆகாச மாரியம்மன்
  ஊர்: திருநறையூர்
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  வைகாசி அமாவாசையைத் தொடர்ந்து நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்குப் பதிமூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா வந்து அருளாசி வழங்குகிறாள்.  
     
 தல சிறப்பு:
     
  இங்கு சமயபுரத்தாள், திருவுருவம் இல்லாமல் எல்லையம்மனாக எழுந்தருளி அருள்புரிவது சிறப்பு.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில் திருநறையூர், தஞ்சாவூர்.  
   
 
பிரார்த்தனை
    
  திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள அம்மனை வேண்டிக்கொள்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் அம்மனுக்கு மல்லிகைப் பூவையும், வளையல்களையும் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  வைகாசி மாத அமாவாசைக்குப் பின் வரும் வெள்ளிக்கிழமை விழாவுக்காக அம்மனின் உருவம் செய்து வழிபடுகிறார்கள். மல்லிகை மலர்களுக்கும் கண்ணாடி வளையல்களுக்குமாக, ஆண்டுதோறும் திருநறையூருக்கு சமயபுரத்திலிருந்து ஆகாச மார்க்கமாக வந்து பதிமூன்று நாட்கள் தங்கிவிட்டு திரும்பிச் செல்லும் சமயபுரத்தாளுக்கு, விழாவின்போது பக்தர்கள் மல்லிகை மலர்களையும் வளையல்களையும் காணிக்கையாகச் சமர்ப்பிக்கிறார்கள். இந்தத் திருவிழாவின்போது, திருமணமாகாத பெண்கள், குழந்தை பாக்கிய வேண்டுபவர்கள், குடும்பத்தில் என்றும் மகிழ்ச்சியை விரும்பும் தம்பதிகள் எல்லோரும் ஆகாச மாரியம்மனைப் பிரார்த்தனை செய்து வளையல்கள் சாற்றுவார்கள். இந்துக்கள் மட்டுமல்ல, அனைத்து இன மக்களும் திரண்டு வந்து தங்கள் நேர்த்திக்கடன்களை இந்த விழாக் காலத்தில் செலுத்துவது வழக்கம். இந்தத் திருக்கோயில், கும்பகோணத்துக்கு அருகிலிருக்கும் நாச்சியார்கோவில் கல் கருடன் ஆலயத்தில் இருந்து சனிபகவான் குடும்பத்துடன் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. இங்கு சமயபுரத்தாள், திருவுருவம் இல்லாமல் எல்லையம்மனாக எழுந்தருளி அருள்புரிகிறாள்.
 
     
  தல வரலாறு:
     
  கவுரவ குலத்தினர் என்னும் கவரைச் செட்டியார் வகுப்பைச் சார்ந்தவர்கள், பரம்பரை பரம்பரையாகக் கண்ணாடி வளையல்களை வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் சொந்த ஊர் திருநறையூராக இருந்தாலும், குதிரைமேல் மல்லாரம் வைத்து வளையல் சாரங்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு ஊராகச் சென்று வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வளையல் வியாபாரிகள் சமயபுரத்துக்கு வந்து அம்மனை வழிபட்டார்கள். வளையல்கள் கொண்ட சாரங்களைத் தெருத்தெருவாக எடுத்துச் சென்று விற்றார்கள். மாலை நேரம் கடந்து, இரவு வந்தது. இரவு இங்கேயே தங்கிவிட்டு, மறுநாள் பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் செல்லலாம் என்று சமயபுரம் கோயிலருகிலுள்ள ஒரு மண்டபத்தில் தன்னுடன் வந்த வளையல் வியாபாரிகளுடன் தங்கினார் வயதான வளையல் வியாபாரி ஒருவர். நல்ல உறக்கம். நடு இரவில் மண்டபத்தில் படுத்திருந்த வளையல் வியாபாரியான பெரியவர் கனவில், இளம்பெண்ணாக வந்தாள் சமயபுரத்தாள். தாத்தா, எனக்கு வளையல்கள் போட்டு விடுகிறீர்களா ? என்றாள். தெய்வீகக் களைவீசும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும், உனக்கு இல்லாத வளையல்களா? எல்லாம் உனக்குத்தாம்மா. இப்படி உட்கார் என்று தான் கொண்டு வந்திருந்த சிறிய ஜமுக்காளத்தை விரித்து, வளையல்களை அடுக்கி, வைத்திருந்த பெட்டியையும், வளையல் சாரம் கொண்ட மூட்டையையும் எடுத்து அந்தப் பெண்முன் வைத்தார். அந்தப் பெண் அமர்ந்தது, வளையல் வியாபாரி அந்த அழகான கைகளுக்கு ஏற்ற வண்ணமயமான கண்ணாடி வளையல்களை ஒவ்வொன்றாகத் தேர்வுசெய்து, அந்தப் பெண்ணின் கைகளில் அணிய முற்படும்போது, வளையல்கள் ஒடிந்துகொண்டே வந்தன. இது அவருக்கு அதிசயமாகவும் திகைப்பாகவும் இருந்தது. அவர் எதிரில் அமர்ந்திருந்த பெண்ணோ, சிரித்துக்கொண்டே பெரியவர் முகத்தைப் பார்த்தாள். அவரோ, வளையல்களைஅந்தப் பெண்ணுக்கு அணிவிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் ஆழ்ந்திருந்தார். அம்மா, என்னவென்றே தெரியவில்லை ! ஆத்தா என்னைச் சோதிக்கிறாள் என்று நினைக்கிறேன். நீ யார் அம்மா? என்று பணிவுடன் கேட்டார். அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லாமல்  அங்கிருந்து எழுந்து, கோயிலை நோக்கிச் சென்றாள். அவரோ, அந்தப் பெண் சென்ற திசையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

கனவிலிருந்து விடுபட்டு திடுக்கெனக் கண்விழித்த பெரியவர், தான் கண்டது கனவா என்றவாறே, வளையல்களை அடுக்கி வைத்திருந்த பெட்டியையும் வளையல்கள் கொண்ட சாரத்தையும் அவசரம் அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். என்ன ஆச்சரியம் ! அவர் வியாபாரத்துக்குக் கொண்டு வந்திருந்த அத்தனை வளையல்களும் உடைந்திருந்தன. இது சமயபுரத்தாளின் சோதனையே என்பதை உணர்ந்து, கோயிலை நோக்கி கைகூப்பித் தொழுதார் அந்தப் பெரியவர். விடிந்தது. மண்டபத்தில் அவருடன் வந்த மற்ற வியாபாரிகள், எழுந்திருக்க முடியாமல் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உடல் முழுவதும் அம்மை போட்டிருந்தது. என்ன செய்வது ? ஆத்தா, இப்படிச் சோதித்துவிட்டாளே ! ஆத்தா, நாங்க ஏதாவது தப்பு செய்திருந்தா எங்களை மன்னிச்சிடும்மா என்று கோயிலை நோக்கி சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து வணங்கி எழுந்தார் அந்தப் பெரியவர். அப்போது, கோயில் குருக்கள் திருநீறு, குங்குமம் கொண்ட பூஜைத்தட்டுடன் அவர்முன் நிற்பதைக் கண்டு அதிசயித்தார்.

செட்டியாரே, கலங்காதீங்க ! விடியற்காலை ஆத்தா என் கனவில் வந்து, வளையல் வியாபாரியான பெரியவர் கொண்டுவந்திருந்த வளையல்களைப் போட்டுக்கொள்ள ஆசைப்பட்டு, என் கையை நீட்டும்போதெல்லாம் விளையாட்டாக வளையல்கள் உடைந்துபோகும்படி செய்துவிட்டேன். அவர் மிகவும் பயந்துபோய் கவலையாக இருக்கிறார். நான் உடைத்த வளையல்களுக்குக் கிரயமாக, என் சன்னிதானத்தில் என் காலடியில் வைத்திருக்கும் பொற்காசுகளை அவருக்குக் கொடுத்து விடுங்கள். நான்தான் வந்தேன் என்பதை அவர் தெரிந்துகொள்ள, அவருடன் வந்திருக்கும் வியாபாரிகள் உடலில் என் முத்திரையைப் பதித்துள்ளேன். அவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும் ? நீங்கள் பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதமான குங்குமத்தையும். திருநீற்றையும் அவர்கள் உடலில் பூசி விடுங்கள். எல்லாம் சரியாகி விடும் என்று உத்தரவு வந்தது. அத்துடன், நீங்கள் இருக்கிற இடத்தையும் உங்களையும் அடையாளம் காண்பித்தா என்று சொன்ன குருக்கள், பொற்காசுகளைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தார். அம்மை போட்டவர்களின் உடலில் திருநீறும் குங்குமமும் தெளிக்க, அம்மை முத்துக்கள் எல்லாம் மறைந்து, உடல்நலம் பெற்று எழுந்தார்கள். எல்லோரும் கோயிலுக்கு அருகில் ஓடும் ஆற்றில் நீராடிவிட்டு, குருக்களுடன் கோயிலுக்குச் சென்று அம்மனை மனமுருக தரிசனம் செய்தார்கள். ஆத்தா ! எங்கிட்டே வளையல் போட ஆசையா கையை நீட்டினியே ! என்னால் வளையல் போட முடியாமல் போய்விட்டதே... என்று பிதற்றிக்கொண்டே அந்த வியாபாரி கோயிலைவிட்டு வெளியே வந்தார். அப்போது, ஆகாயத்தில் எல்லோருக்கும் காட்சி கொடுத்து அருளாசி வழங்கினாள் சமயபுரத்தாள்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சமயபுரத்தாள், திருவுருவம் இல்லாமல் எல்லையம்மனாக எழுந்தருளி அருள்புரிவது சிறப்பு.
 
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar