பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் பூ பல்லக்கில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து படி கோயிலுக்கு திரும்பினார்.
பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் உள்ளது. இங்கு ஏப்.18 அன்று காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கி நடந்தது. ஏப்.22 பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வெள்ளி கிண்ணத்தில் அவள் பாயாசம் சாப்பிட்டபடி வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களின் கோவிந்தா கோஷத்திற்கு மத்தியில் அருள் பாலித்தார். மறுநாள் குதிரை வாகனம், சேஷ வாகனத்தில் எழுந்தருளி, மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து தசாவதார காட்சி நடத்தினார். மேலும் ராஜாங்க திருக்கோலத்தில் முத்து பல்லக்கில் அருளினார். இன்று காலை 7:00 மணிக்கு பெருமாள் மீண்டும் கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல்மணி தோரணங்கள் சூடிக்கொண்டு வளரி, தடியென அனைத்து வகையான ஆயுதங்களுடன் கருநீள பட்டுடுத்தி பூப்பல்லக்கில் அமர்ந்தார். தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து கிளம்பி நகரில் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். பெருமாளுக்கு தேங்காய் உடைத்து வழிநெடுகிலும் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு அழகர் காவல் தெய்வம் கருப்பண சுவாமியிடம் சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தது. அப்போது மலர் தூவி பல ஆயிரம் பக்தர்கள் வெள்ளத்தில் கோவிந்தா கோஷம் விண்ணதிர திருக்கோயிலை அடைந்தார். நாளை காலை பெருமாளுக்கு உற்சவ சாந்தி திருமஞ்சனம் நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.