பதிவு செய்த நாள்
28
ஜன
2015
10:01
உத்திரமேரூர்: திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, ரத சப்தமி உற்சவம் கோலாகலமாக நடந்தது. திருமுக்கூடல் பாலாற்றங்கரையோரம், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதத்தில் ரத சப்தமி உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, 100வது ஆண்டு ரத சப்தமி விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவினை முன்னிட்டு, நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து, காலை 6:00 மணிக்கு சூரிய பிரபையில் கோபுர வாசல் தரிசனம் தந்த அப்பன் வெங்கடேச பெருமாள், தொடர்ந்து, குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதியுலா வந்தார்.பிற்பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 4:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, பல்வேறு குழுவினர்களால் சிறப்பு மங்கள இசை நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சந்திர பிரபையில் சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து, திருமுக்கூடல் பகுதியில் வீதி உலா வந்தார். இவ்விழாவில், அப்பகுதி யை சுற்றிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.