ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்



ஊட்டி; ஊட்டி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர் திருவிழா கடந்த மாதம், 13ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. 16ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், பல்வேறு விசேஷ பூஜைகளும் நடந்தது. மார்ச், 20ம் தேதி முதல் கடந்த, 14ம் தேதி வரை ஒவ்வொரு சமுதாய சங்கங்கள் சார்பில் சுவாமி வீதி உலா நடந்தது. அதில், ஆதிபராசக்தி, துர்க்கை, காமாட்சியம்மன், கருமாரியம்மன், பவானி அம்மன், ராஜகாளி, ஹெத்தையம்மன், அங்காளம்மன் போன்ற அலங்காரங்களில் அம்மன் உலா வந்தார். நேற்று காலை, 10:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேர்கலசம் பொருத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. அதில், காலை, 6:00 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. 9:00 மணிக்கு விநாயகர், மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, சிறப்பு கனகாபிஷேகம் நடந்தது. மதியம், 1:55 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சிம்ம வாகனத்தில் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கலெக்டர் லட்சுமி பவ்யா தேரை வடம் பிடித்து துவக்கி வைத்தார். எஸ்.பி., நிஷா மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.


கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், எம்.எஸ்., லைன் வழியாக காபி ஹவுஸ் சந்திப்பு, மணிக்கூண்டு, லோயர் பஜார், மின்வாரிய ரவுண்டானா, மெயின் பஜார், ஐந்து லாந்தர் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வந்தது. அப்போது பக்தர்கள் பக்தி கரகோஷமிட்டவாறு கல் உப்புகளை துாவி நேர்த்தி கடன் செலுத்திவழிபட்டனர். தேருக்கு முன்பு சென்ற சிறு தேர்களில் விநாயகர், ஆதிபராசக்தி உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளினர். தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி ஊட்டியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர். நாளை 16ம் தேதி வெள்ளை குதிரையில் நீலாம்பிகை பவனி வரும் நிகழ்ச்சியும், 17ம் தேதி அம்மனின் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்