மறைமலை நகர்; பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகாசி மாத தேரோட்டம் விமரிசையாக நடந்தது. சிங்கபெருமாள் கோவில் –- அனுமந்தபுரம் சாலையில், அகோபிலவல்லி தாயார் சமேத பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோத்சவம் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான பிரம்மோத்சவத்திற்கு, கடந்த 31ம் தேதி கொடி ஏற்றப்பட்டது. கடந்த ஆறு நாட்களாக சூர்ய பிரபை, சந்திர பிரபை, யாளி வாகனம், யானை வாகனத்தில் உற்சவர் பிரகலாத வரதர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று விமரிசையாக நடந்தது.அதிகாலை உற்சவர் பிரகலாதவரதர், ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. காலை 6:30 மணிக்கு, சுவாமி தேரில் எழுந்தருளினார். 7:00 மணிக்கு தேரின் வடம் பிடித்து, பக்தர்கள் இழுத்துச் சென்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி, பக்தி பரவசமடைந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் நான்கு மாட வீதிகளில் வலம் வந்த தேர், காலை 11:30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கூடுவாஞ்சேரி சரக உதவி ஆணையர் தலைமையில், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.