சென்னை; வடபழனியில் உள்ள முருக பெருமான் கோவிலில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருவிழா, கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் பிரதான நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை 6:20 மணிக்கு, உற்சவர் தேரில் எழுந்தருளினார். காலை 6:30 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் இணைந்து தேர் வடம் பிடித்தனர். நான்கு மாட வீதிகளையும் தேரில் வலம் வந்த முருக பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 10:15 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி தேரில் இருந்து கோவிலுக்கு பிரவேசித்தார். பின், உச்சிகால பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி தேரில் வீதி உலா வந்து அருள்பாலித்த களைப்பு நீங்க, இரவு 7:00 மணிக்கு ஒய்யாளி உத்சவம் நடந்தது. பிரம்மோத்சவத்தில், இன்று இரவு 7:00 மணிக்கு, குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது.
புரசைவாக்கம், பங்கஜாம்பாள் சமேத கங்காதரேஸ்வரர் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவம் விழாவில் நேற்று, தேரோட்டம் நடந்தது. இக்கோவிலுக்கு, 81 லட்சம் ரூபாயில் புதிய மரத்தேர் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், பழைய தேரும் பராமரிக்கப்பட்டு உள்ளது. இரு தேர்களும், நேற்று தேரோட்டத்திற்கு தயாரானது. பக்தர்கள் வடம் பிடித்து, இரு மாட வீதிகள் வழியாக தேர்களை இழுத்து சென்றனர்.
அரும்பாக்கத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலின் 42ம் ஆண்டு தீமிதி திருவிழா, நேற்று காலை துவங்கியது. அதே பகுதியில் உள்ள உத்தனாட்சி அம்மன் கோவிலில் இருந்து, திரளான பக்தர்கள் 1,008 பால்குடம் ஏந்தி, தீச்சட்டியுடன், அலகு குத்தி ஊர்வலமாக வந்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.