ரிஷிவந்தியம்; ரிஷிவந்தியம் அருகே பாஞ்சாலி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தில் உள்ள பாஞ்சாலி அம்மன் கோவிலில் தேர்திருவிழா, கடந்த மே,23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஊர்வலம் நடந்தது. நேற்று நள்ளிரவு 1:00 மணிக்கு, பக்தர்கள் உற்சவரை தோளில் சுமந்து வந்து தேரில் எழுந்தருள செய்தனர். நள்ளிரவு 2:00 மணிக்கு, தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். நேற்று அதிகாலை 6:15 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக நேற்று மதியம் 12:30 மணிக்கு மீண்டும் பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து, ஊரில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக இழுத்து சென்றனர். தேர் கோவிலுக்கு வந்ததும் தீ மிதி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீயில் நடந்து சென்று, நேர்த்தி கடனை செலுத்தினர்.