இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தன்று திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இன்று வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை நால்வர் சன்னதியில் உள்ள திருஞானசம்பந்தருக்கு பால்,பன்னீர், சந்தனம்,குங்குமம்,நெய்,இளநீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது. மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தின் சார்பில் ஞானசம்பந்தர் நற்றமிழ் என்னும் தலைப்பில் திருமுறை பாராயணங்கள் நடைபெற்றது. விழாவில் இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.