பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் ஸ்ரீராமேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் சிறப்பு சிவன், சீதா – ராமர் – லட்சுமணருடன் ஹனுமன் அருள்பாலிக்கின்றனர். அதற்கு ஏற்றாற் போன்று, இக்கோவிலுக்கு இரு நுழைவு வாயில்கள் உள்ளன. மைசூரு நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் 21வது பிறந்த நாளை ஒட்டி, 1905ல் கட்டப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
2 நுழைவாயில்; இரண்டு நுழைவாயில்களில் ஒன்று சிவனை நோக்கியும்; மற்றொரு நுழைவாயில் சீதா – ராமரை நோக்கியபடியும் அமைந்து உள்ளது. இது போன்று இரு விளக்கு கம்பங்களும் அமைந்து உள்ளன. கோவிலுக்குள் நுழைந்ததும் விசாலமான பகுதி நம்மை வரவேற்கிறது. வலதுபுறத்தில் சுவாமியின் கல்யாண உற்சவம் நடத்தும் வகையில், நான்கு சிறிய துாண்கள், சிறிய கோபுரத்துடன் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன், ராமேஸ்வரம் மணலில் செய்யப்பட்டது என்றும்; 500 ஆண்டு கால பழமையானது என்றும் கூறப்படுகிறது. இது தவிர, தாய் பார்வதிக்கு தனி சன்னிதி உள்ளது.
நவகிரஹ வனம்; அதுபோன்று, மஹாகணபதி சன்னதியில் சிறியது, பெரியது என இரு விக்ரஹங்கள் உள்ளன. சுப்பிரமணியர் சன்னிதியும் உள்ளது. இங்குள்ள நவகிரஹ சன்னிதி மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு கிரஹத்திலும் அவரவர் வாகனங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. சன்னிதானத்தில் இருந்து வெளியே வந்தால், இடது புறத்தில் ‘நவகிரஹ வனம்’ அமைந்து உள்ளது. இங்கு கெம்பே கவுடா காலத்திய கற்களில் சிவன், விஷ்ணு அவதாரங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. அத்துடன், நவகிரஹத்திற்கு ஏற்ற மரங்களும் உள்ளன. மேலும் நாக விக்ரஹங்களும் அமைந்து உள்ளன. இக்கோவில் காலை 6:00 முதல் 11:30 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். மூலவர் சன்னிதிக்கு வெளியே வந்து, வலது புறம் சென்றால், 100 ஆண்டுகள் பழமையான மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தசரா உட்பட திருவிழா நாட்களில், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா மாநிலங்களை சேர்ந்த பிரபல கர்நாடக இசை மேதைகளின் கச்சேரி நடக்கும். காலப்போக்கில், இந்த மண்டபம், அரசு துவக்கப் பள்ளியாக மாற்றப்பட்டது. இங்கு படித்த பலரும் தற்போது டாக்டர், இன்ஜினியர் என பல உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இங்கு படித்து டாக்டராகி உள்ள பிரகாஷ் தலைமையில், கோவில் அபிவிருத்தி கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இக்கமிட்டியினர், கோவிலை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி இயங்கி வந்த இடத்தில் பரதநாட்டியம், யோகா வகுப்புகள் நடத்தவும்; ஏழைகள் திருமணம் செய்து கொள்ளும் வகையில் மேம்படுத்தவும் தீர்மானித்து உள்ளனர். – நமது நிருபர் –