சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதருக்கு குருபூஜை நடந்தது. அரச குடும்பத்தில் பிறந்து சிங்கம்புணரியில் மக்களோடு வாழ்ந்து சித்துக்கலை மூலம் பல நன்மைகள் புரிந்தவர் சித்தர் முத்துவடுகநாதர். இவர் 1883 ம் ஆண்டு ஆடி மாத ரோகிணி நட்சத்திரத்தன்று ஜீவசமாதி அடைந்தார். அந்த இடத்தில் கோயில் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. ஜீவசமாதி அடைந்த தினமான இன்று குருபூஜை நடந்தது. இதையொட்டி காலை 9:30 மணிக்கு சித்தருக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அன்னதானத்திற்காக சமைக்கப்பட்ட சாதத்தில் வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சித்தர் வழிபாட்டுக்குழுவினர் பங்கேற்றனர்.