குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் மூன்றாவது வார பெருந் திருவிழா : குவிந்த பக்தர்கள்



சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மூன்றாவது சனி வார திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தேனி மாவட்டம் குச்சனூரில் பிரசித்திபெற்ற சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு தனி கோயில் இது மட்டுமேயாகும். ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் திருவிழா நடைபெறும். குறிப்பாக மூன்றாவது சனிக்கிழமை பெருந்திருவிழாவாக கொண்டாடப்படும். கோயில் திருப்பணி நடைபெறுவதால் கடந்த 2 ஆண்டுகளாக அதிகார பூர்வ திருவிழா நடைபெறவில்லை. இருந்த போதும் நேற்று சனீஸ்வர பகவானுக்கும், நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று காலை மூன்றாவது வாரம் என்பதால் அதிகாலை முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்தனர். கோயிலிற்கு முன்பு ஒடும் சுரபி நதியில் குளித்து, காக்கை வாகனம் வாங்கி விடுதல், எள்ளு, உப்பு சாத்துதல் போன்ற நேர்த்திகடன்களை நிறைவேற்றினர். தீபங்களை ஏற்றினர். சுவாமிக்கும், அம்மனுக்கும் அதிகாலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆக . 11 ல் கருப்பண சுவாமிக்கு மது பாட்டில் படையல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். பக்தர்கள் வந்த வாகனங்கள் 2 கி.மீ. தூரத்திற்கு வரிசையாக நின்றது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தேனி, சின்னமனூர், கம்பம், போடி போன்ற, ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்