தேவகோட்டை; தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி விழா நிறைவடைந்தது. இக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்.22ல் பாலதண்டாயுதபாணிக்கு காப்பு கட்டப்பட்டு துவங்கியது. தினசரி பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து விபூதி,சந்தனக் காப்பு அலங்காரத்தில் மூலவருக்கு அலங்காரம் நடத்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆறு தினங்கள் லட்சார்ச்சனை நடந்தது. உற்சவமூர்த்தி முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வாகனங்களில் வீதி உலா நடந்தது 6ஆம் நாள் சூரசம்காரம் நடைபெற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து மறுநாள் தெய்வானை கல்யாணமும், அடுத்த நாள் வள்ளி திருமணமும் நடந்தது. திருமணங்கள் நடந்த பின்னர் வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வந்து மக்களுக்கு அருள்பாலித்தார். நிறைவு நாளான இன்று விடையாற்றியை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேக,ஆராதனைகள் நடந்து சஷ்டி விழா நிறைவடைந்தது. நூற்றுக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்தனர்.