ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே சிலுக்குவார்பட்டி முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா பல்வேறு காரணங்களால் 45 ஆண்டுகளாக தடைபட்டது. இந்நிலையில் அனைத்து சமுதாயத்திற்கும் பாத்தியப்பட்ட முத்தாலம்மன் கோயில் விழாவை 4 கிராமங்களை பொதுமக்கள் ஒன்றுகூடி இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்தனர். மூன்று நாட்கள் நடந்த விழாவில் சிலுக்குவார்பட்டிஊர் நாட்டாமை வீட்டில் அம்மன் கரகம் எடுக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் காத்திருந்த சேடப்பட்டி, டி.ராஜகோபாலன்பட்டி கிராம பொதுமக்களை சிலுக்குவார்பட்டி, சிங்கராஜபுரம் கிராம மக்கள் ஊர் மரியாதை செய்து அழைத்துச் சென்றனர். நாட்டாமை வீட்டில் இருந்து அம்மன் கரகம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பொங்கலிட்டு, முளைப்பாரி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை மனோகரன், பெரிய தனம் ரமேஷ் ஆகியோர் தலைமையில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.