திருப்பதி; திருமலை சேஷாசலக் காடுகளில் உள்ள புனித யாத்திரைத் தலங்களில் ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி, ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி அன்று ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டியை கொண்டாடுவது வழக்கம்.. புராணங்களின்படி, இந்த புனிதத் தலம் ஸ்ரீ ராமகிருஷ்ண மகரிஷியின் தவ வலிமையால் உருவாக்கப்பட்டது. கோவில் அர்ச்சகர்களும் ஊழியர்களும் மந்திரங்களை உச்சரித்தவாறு, ஸ்ரீ வாரி கோவிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு காலை 11 மணிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண தீர்த்தத்தை அடைந்தனர். அங்கு, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சிலைகளுக்கு பால், தயிர், சந்தனக் குழம்பு மற்றும் பிற நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்தனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நைவேத்தியங்கள் படைக்கப்பட்டன.
பாவவிநாசம் அணையில், ஸ்ரீ வாரி சேவகர்கள் ராமகிருஷ்ண தீர்த்தத்திற்குச் செல்லும் பக்தர்களுக்குப் பொங்கல், உப்புமா, சாம்பார் சாதம், தயிர் சாதம், புளியோதரை பொட்டலங்கள், குடிநீர் மற்றும் மோர் பொட்டலங்களை விநியோகித்தனர். திருமலை திருப்பதி தேவஸ்தானம் மருத்துவத் துறை சார்பில் அந்த இடத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு மருந்துகள் வழங்கப்பட்டன. தேவஸ்தான பொறியியல் மற்றும் வனத்துறைகள் பக்தர்களின் வசதிக்காக வழியில் பல இடங்களில் நடைபாதைகளை அமைத்திருந்தன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடினர்.