திருமழிசை: திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அருகே திருமழிசை அமைந்து உள்ளது.
இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள ‘பக்திஸாரர்’ எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, ‘தையில் மகம்’ திருஅவதார மகோத்சவம், கடந்த 9ம் தேதி காலை 7:30 – 9:00 மணிக்கு பந்தக்கால் நடப்பட்டது.
அதன்பின், தொடர்ந்து 12 நாட்கள் ஆழ்வாருக்கு தையில் மக திருஅவதார மகோற்சவ விழாவில், காலை – மாலை பல்வேறு பல்லக்கில் சுவாமி எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று காலை 7:30 மணியளவில் ஆழ்வார் தேரில் எழுந்தருளினார்.
தேர் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளராக, பூந்தமல்லி தி.மு.க., – எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி பங்கேற்று, தேர்த்திருவிழாவை வடம்பிடித்து துவக்கி வைத்தார்.
இதில், பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்று, ‘கோவிந்தா... கோவிந்தா’ என, கோஷமிட்டபடி தேரை இழுத்தனர். மதியம் 2:30 மணிக்கு தேர் கோவிலை வந்தடைந்தது.