கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது தாக்கத்திலிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்று கம்பம் கம்ப ராயப் பெருமாள் கோயிலில் இன்று நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவில் விளக்கம் தரப்பட்டது.
சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகி உள்ளார். இது தொடர்பாக கம்பம் கம்பராயப் பெருமாள் கோயில் வளாகத்தில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இதில் பங்கேற்று ஆன்மிக பேச்சாளர் மோகனவேலு பேசியதாவது : சூரிய பகவானின் மூத்த மகன் யமதர்மன், இளைய மகன் சனி பகவான். சனி பகவான் தனது தாய் சாயாதேவிக்கு கெளரவம் கிடைக்க பெரிதும் பாடுபட்டார். காசியில் சிவபெருமானை நோக்கி தவம் செய்து கிரக பதவி பெற்றார். சனி பகவான் சாந்தமூர்த்தி, ஆயுள் காரகர். பக்தர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்க அருள் புரிவார். அவரைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. நல்லெண்ணெய் தீபம் ஏற்றுதல், கோயில்களுக்கு இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்கி தருதல், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல், சுமங்கலி பெண்களுக்கு வஸ்திர தானம் செய்தல் , வயதான பெற்றோர்களை பாதுகாத்தல் முதலியவை சனி பகவானுக்குரிய பரிகாரங்கள். அது மட்டுமின்றி இறைவழிபாடு, குரு வழிபாடும் அவசியம். கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு இரண்டு சுற்று ஏழரை நாட்டு சனி வந்த போதும், அவருக்கு ஒரு துன்பமும் நேரவில்லை. காஞ்சி பெரியவர் இருக்கும் இடத்தில் இருந்து 500 அடி சுற்றளவிற்கு கிரகங்கள் வேலை செய்யாது. சனி பகவான் நீல நிறமுடைய வஸ்திரம், பொருள்கள் வைத்திருப்போருக்கு நன்மையே செய்வார். இவ்வாறு பேசினார்.