திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரம் கூத்தாண்டவர் கோவில் 522ம் ஆண்டு சித்திரை பெருவிழா நடந்தது.
அரகண்டநல்லூர் அடுத்த அருணாபுரம் கிராமத்தில் பழமைவாய்ந்த கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இவ்வாலயத்தில் கடந்த 24 ம் தேதி 522ம் ஆண்டு சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு 7:00 மணிக்கு திருநங்கைகள் தாலி கட்டி, வான வேடிக்கையுடன், கரகாட்டம், மேளதாளம் முழங்க கூத்தாண்டவர் திருமண கோலத்தில் இந்திர விமானத்தில் வீதியுலா நடந்தது. இன்று காலை 9:00 மணிக்கு அரவான் யுத்த கோலத்தில் பெரும் தேர்பவனி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடுகளை பலியிட்டு, தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். மாலை 5:30 மணிக்கு அரவான் களபலி நடைபெற்றது. இரவு 10:00 மணிக்கு இந்திர விமானத்தில் சுவாமி காட்டுகுகை கோவிலுக்கு புறப்பட்டுச் செல்லும் வைபவம் நடக்கிறது விழாவின் நிறைவாக வரும் 14-ம் தேதி மாலை 5:00 மணிக்கு காட்டு கோவிலில் தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, நாட்டாமைகள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். இதில் திருநங்கைகள் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.