மதுரை சித்திரை திருவிழா நிறைவு; கள்ளழகருக்கு உற்சவ சாந்தி பூஜை



மதுரை: சித்திரை திருவிழாவில் அழகர் மலைக்குத் திரும்பிய கள்ளழகருக்கு சிறப்பு உற்சவ சாந்தி பூஜைகள் நடைபெற்றது.


அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. மதுரை வைகை ஆற்றில் எழுந்தருள தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, ஏப்30ம் தேதி எதிர்சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரலாற்று சிறப்பு மிக்க அழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 1ம் தேதி நடந்தது. பின் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம், பூப்பல்லக்கு என பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்தார். நேற்று மாலை புதூரில் இருந்து புறப்பட்டு, இரவு அப்பன் திருப்பதியில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். பின் அதிகாலை புறப்பட்டு கோயிலுக்கு சென்றார். கோயில் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமி முன் எழுந்தருளினார். அங்கு தீப ஆராதனைகள் நடந்தன. கோயிலுக்குள் வந்த கள்ளழகரை கூடியிருந்த பக்தர்கள் ""கோவிந்தா கோஷம் எழுப்பி மலர் தூவி வரவேற்றனர். பின் 18 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி மூன்று முறை அழகரை சுற்றி திருஷ்டி கழித்தனர். தொடர்ந்து இன்று கள்ளழகருக்கு சிறப்பு உற்சவ சாந்தி பூஜைகள் நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற திருவிழாவின் போது ஏற்பட்ட களைப்பு நீங்கவும், விழாவின் போது ஏதேனும் குறைகள் ஏற்பட்டிருந்தால் அவற்றிற்குப் பரிகாரமாகவும் இந்தப் பூஜை செய்யப்படுவது குறிபடத்தக்கது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்