பரமக்குடி: பரமக்குடியில் ஆடி வெள்ளியையொட்டி பக்தர்கள் நயினார்கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வழிபட்டனர். மேலும் அம்மன் கோயில்களில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பரமக்குடி அருகே 12 கி.மீ., தொலைவில் நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற சிறப்புகள் வாய்ந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த வருகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். நேற்று காலை 5:00 மணி தொடங்கி பரமக்குடி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் நடந்து சென்றனர். பின்னர் கோயிலில் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இதன்படி திருமண தடை நீங்கவும், குழந்தை பேறு வேண்டுவோர் மற்றும் அனைத்து வகையான வேண்டுதல்களுக்கும் பக்தர்கள் நடந்து சென்று தங்கள் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். *நயினார்கோவில் மருதவன மாகாளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் மூலவருக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதேபோல் ஆடி முதல் வெள்ளியையொட்டி அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் திரளாக தரிசனம் செய்தனர்.