சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் திருப்பணிகள் ஹிந்து சமய அறநிலைய துறையின் மெத்தனத்தால் மூன்று ஆண்டுகளாக மந்த நிலையில் நடந்து வருகிறது. திருப்பணிகள் நிறைவு பெறாததால் திருவிழா முழுமையாக நடைபெறவில்லை என பக்தர்கள் குமுறுகின்றனர்.
குச்சனூரில் சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளிய ஸ்தலம். சனீஸ்வர பகவானுக்கென தனிக் கோயில் இங்கு மட்டுமே உள்ளது. ஆண்டுதோறும் ஆடி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் ஆடிப்பெருந் திருவிழா நடைபெறும். இத் திருவிழா கடந்த மூன்று ஆண்டுகளாக ரத்து செய்யப்படுள்ளது. திருவிழா ரத்து செய்யும் ஹிந்து சமய அறநிலைய துறையின் அறிவிப்பை எதிர்த்து உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஒருவர் தொடர்ந்ததால் சில நிகழ்ச்சிகள் தவிர்த்து திருவிழா நடத்த கோர்ட் உத்தரவிட்டது. வேறு வழியின்றி ஹிந்து அறநிலைய துறையும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. திருவிழாவில் முக்கிய நிகழ்வுகள் இல்லை: இருந்த போதும் திருக்கல்யாணம், சுவாமி புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாத நிலை உள்ளது. முழு அளவில் திருவிழா நடைபெற கொடிமரம் மீண்டும் வைக்க வேண்டும். திருப்பணிகள் நிறைவு பெறும் போது தான் கொடி மரம் வைக்க முடியும். ஆனால் திருப்பணிகள் மந்த நிலையில் மேற்கொண்டு வருகின்றனர் . இது தொடர்பாக கோயில் பணியாளர்களிடம் விசாரித்த போது, ‘திருப்பணி வேலைகள் பல்வேறு காரணங்களால் தாமதமாகி விட்டது. தற்போது பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,’ என்கின்றனர்.
திருப்பணிகளில் தாமதம் ஏன்: பிரசித்தி பெற்ற ஒரு கோயிலின் திருப்பணிகள் விஷயத்தில் ஹிந்து அறநிலைய துறை அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக பத்தர்கள் புகார் சாட்டுகின்றனர். கோயில் திருப்பணியில் கால தாமதம் ஏன் என்பது புரியவில்லை. விரைந்து திருப்பணிகளை முடித்து, ஆடிப் பெருந்திருவிழாவை முழுமையாக நடத்த நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.