மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று (செப்.,11) மாலை யாகசாலை பூஜை துவங்குகிறது. செப்.,17 கும்பாபிஷேகம் வரை இங்கு அம்மன், சுவாமி மூலவர்களை கும்பவடிவில் தரிசிக்கலாம்.
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடக்கிறது. அன்று காலை 7:40 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க விமானங்கள், ராஜகோபுரங்களுக்கும், காலை 7:55 மணிக்கு மூலவர் அம்மனுக்கும், காலை 8:10 மணிக்கு மூலவர் சுந்தரேஸ்வரருக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று கும்பாபிஷேக சடங்குகளில் பங்கேற்கும் சிவாச்சாரியர்களுக்கு பொற்றாமரைக்குளத்தில் ஆச்சார்ய ஸ்நானம் நடந்தது. இதைதொடர்ந்து இன்று மாலை 4:30 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. தினமும் யாக வேள்வி நடக்கிறது. செப்.,16 அதிகாலை 5:00 மணி முதல் 6:00 மணிக்குள் கோயிலின் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை கோயிலுக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை எழுந்தருளுகின்றனர். செப்.,17 மாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மஹாஅபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
யாகசாலையில் மூலவர்கள்; கோயிலில் இன்று மதியம் வரை அம்மன், சுவாமி மூலவர்களை பக்தர்கள் தரிசிக்கலாம். இதன்பிறகு செப்., 17 வரை யாகசாலையில் கும்பவடிவில் எழுந்தருள செய்திருக்கும் மூலவர்களை தரிசிக்கலாம். கும்பாபிஷேக பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு கோயில் சார்பில் ரூ.5 கோடிக்கு குழு விபத்து காப்பீடு செய்யப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகளுக்கு தேவையான பொருட்களை பக்தர்கள் உபயமாக வழங்கலாம். விருப்பமுள்ளவர்கள் கோயில் வடக்காடி வீதி திருவள்ளுவர் கழகத்தில் வழங்கலாம்.