ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரம்மோத்சவத்தின்போது நடைபெறும் கருட சேவைக்கு, தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், ‘ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட்’ சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் இருந்து வெண்பட்டு குடைகள் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன.
நடப்பாண்டு திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் நேற்று காலை 10:00 மணிக்கு தொடங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு ஊர்வலம் புறப்பட்டு, பெரம்பூர், திரு.வி.க., நகர் வழியாக வில்லிவாக்கம் சென்று, சவுமிய தாமோதர பெருமாள் கோவிலை அடைகிறது. 15ம் தேதி பாடி, முகப்பேர், அம்பத்துார் வழியாக இரவு திருமுல்லைவாயல் செல்கிறது. 16ம் தேதி ஆவடி, இந்து கல்லுாரி, பட்டாபிராம், திருநின்றவூர் வழியாக வெங்கடேஸ்வரா திருமண மண்டபம் செல்கிறது. 17ல் திருப்பாச்சூர், கனகம்மாள் சத்திரம் வழியாக கீழ்த்திருப்பதி எஸ்.எம்.எஸ்.ஓ., சபா கல்யாண மண்டபத்தை சென்றடைகிறது. வரும் 18ம் தேதி காலை 6:00 மணிக்கு திருப்பதியை அடைந்து, மாலை 3:00 மணிக்கு பெருமாளுக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்கப்பட உள்ளன. விழாவில் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட் அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.