ஜனவரி 20,2022
சபரிமலை: மகரஜோதி சீசன் முடிந்து சபரிமலை நடை காலை அடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருவாபரணங்கள் பந்தளத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.
14–ம் தேதி மகர ஜோதி தரிசனத்துக்கு பின்னர் சுவாமி பவனி, சரங்குத்திக்கு எழுந்தருளல், மாளிகைப்புறத்தில் குருதி பூஜை ஆகியவை நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு நடை திறந்தது. சிறிது நேரத்தில் பந்தளம் மன்னர் பிரதிதிநிதி சங்கர்வர்மா ஸ்ரீகோயில் முன்பு வந்தார். அவருக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி பிரசாதம் வழங்கினார். பின்னர் திருவபாரண பெட்டிகளுடன் பக்தர்கள் குழுவினர் வந்தனர். அவர்கள் ஐயப்பனை வணங்கி விட்டு பந்தளத்துக்கு புறப்பட்டனர். தொடர்ந்து மேல்சாந்தி நடை அடைத்து சாவியுடன் 18–ம் படிக்கு கீழே வந்தார். அங்கு வந்த சங்கர்வர்மாவிடம் மேல்சாந்தி கோயில் சாவி மற்றும் பண முடிப்பை வழங்கினார். அதை பெற்றுக்கொண்ட அவர் மீண்டும் சாவி மற்றும் பணமுடிப்பை மேல்சாந்தியிடம் கொடுத்து வரும் நாட்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி விடை பெற்றார். இனி மாசி மாத பூஜைகளுக்காக பிப்., 12–ம் தேதி மாலை நடை திறக்கும்.