பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசம் கும்பமேளாவில் இதுவரையில் 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.
உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மஹா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். குறிப்பாக மகர சங்கராந்தி, மவுனி அமாவாசை, வசந்த பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருந்தது. இதனால், அங்குள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. அமாவாசை அன்று மட்டும் 8 கோடி பேரும், மகர சங்கராந்தி அன்று 3.5 கேடி பேரும், வசந்த பஞ்சாமி அன்று 2.57 கோடி பேரும் புனித நீராடினர். ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, உள்ளிட்ட தலைவர்களும் புனித நீராடி உள்ளனர். இதனையடுத்து இந்நிகழ்வில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்னும் 10 நாட்கள் இருப்பதால், கும்பமேளாவுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.