மதுரை; திருமங்கலம் அருகே உள்ள வடக்கம் பட்டி ஸ்ரீ முனியாண்டிசுவாமி திருக்கோவிலில் 89வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து விடிய விடிய வரிசையில் காத்திருந்து பிரியாணி பிரசாதம் வாங்கிச் சென்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீமுனியாண்டிசுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தை மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு சமுதாயத்தை (நாயுடு) சேர்ந்தவர்களும் மாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மற்றொரு சமுதாயத்தை (ரெட்டியார்) சேர்ந்தவர்களும் நடத்தி வரும் விழாவான பிரியாணி திருவிழா வெகுவிமர்ச்சையாக நடைபெறுவது வழக்கம். ரெட்டியார் சமுதாயத்தினர் இந்த ஆண்டு பிரியாணி திருவிழாவிற்காக 90வது ஆண்டாக ஒருவாரம் காப்புகட்டி விரதம் மேற்கொண்டனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விரதமேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாலை நடைபெற்ற விழாவில் கோவில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பெண் பக்தர்கள் தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து, சுவாமிக்கு பூஜை செய்து தரிசனம் செய்தனர்.
இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பலஇடங்களில் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்திவருபவர்கள் மற்றும் உள்ளுர் வெளியூர் மக்கள் உட்டபட ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாசுவாமிக்கு பலியிடப்பட்டு 2500 கிலோ பிரியாணி அரிசியில் அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார்செய்து இன்று சனிக்கிழமை காலை கருப்பசாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஏற்கனவே அண்டாக்களில் தயாராக வைக்கப்பட்டிருந்த பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி,வில்லூர்,அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் விடிய விடிய காத்திருந்து பிரியாணியை பெற்றுச் சென்றனர்.