நத்தம்; தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது நத்தம் மாரியம்மன் கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் மாசித்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மாசிப்பெருந்திருவிழா வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து மறுநாள் 4-ந்தேதி உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சந்தன கருப்பு சுவாமி கோவிலை வந்து சேருவர். பின்னர் காலை 8.45 மணிக்கு அங்கிருந்து பக்தர்கள் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள்.அன்றைய தினம் இரவு அம்மன் குளத்தில் இருந்து நகர் வலமாக கம்பம் எடுத்து வரப்பட்டு கோவிலில் ஸ்தாபிதம் செய்யப்படும். மார்ச் 7-ந்தேதி மயில் வாகனத்திலும்,11-ம் தேதி சிம்ம வாகனத்திலும், 14-ம்தேதி அன்ன வாகனத்திலும் மின்விளக்கு அலங்காரத்தில் அம்மன் நகர்வலம் வந்து அங்குள்ள மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 16-ம் தேதி பக்தர்கள் பால்குடமும், 17-ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 18-ம் தேதி அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல் மற்றும் கழுமரம் ஊன்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலையில் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 19-ந்தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் பரம்பரை பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.