திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் கோயில் மூலஸ்தானங்களில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு ஏப். 9ல் பாலாலயம் நடக்க உள்ளது.
இந்தக் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவங்கும் வகையில் ராஜகோபுரம், கோவர்த்தனாம்பிகை விமானம், வல்லப கணபதி விமானம், படிக்கட்டு விநாயகர் கோயில் விமானம், உபகோயில்களான காசி விஸ்வநாதர் கோயில் விமானம், பழனி ஆண்டவர் கோயில் விமானம், சொக்கநாதர் கோயில் விமானம், அங்காள பரமேஸ்வரி குருநாதசுவாமி கோயில், பாம்பலம்மன் கோயில்களுக்கு பிப்.10ல் பாலாலயம் நடந்தது. கோயில் விமானங்களில் சீரமைப்பு பணிகள் முடிந்து வண்ணம் தீட்டும் பணி நடக்கிறது. உற்ஸவர் சன்னதியில் மேல்பகுதி கமலங்களில் வண்ணம் தீட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளது. அனைத்து மண்டபங்களிலும் பணிகள் நடக்கிறது. ஜூலை 17ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது.அதன் பின்பு திருப்பணிகள் விறுவிறுப்பு பெற்றுள்ளது. மார்ச் 5 முதல் மார்ச் 20வரை பங்குனி திருவிழா நடந்ததால், பக்தர்கள் மூலவர்களை தரிசிக்க ஏதுவாக மூலஸ்தானத்தில் கும்பாபிஷேக பணிகளை திருவிழா முடிந்த பின்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
மூலஸ்தானங்களில் பாலாலயம்; ஏப். 7ல் ஐந்து மூலவர்கள் மூலஸ்தானங்களுக்கான பாலாலயத்திற்கான யாகசாலை பூஜை துவங்குகிறது. ஏப். 9 அன்று மூலவர்களுக்கு பாலாலயம் நடக்கிறது. அதற்கான முதல் கட்ட பணிகளும் நடந்து வருவதாக அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா தெரிவித்தார்.