லக்னோ: ராம நவமியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமி மந்திரில் ஸ்ரீ ராம நவமி விழா இன்று ஏப்ரல் 6, சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தி ராம ஜென்மபூமியில் ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்தாண்டு ராம நவமி பண்டிகை பிரமாண்டமாக கொண்டாட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ராம நவமி தினமான இன்று தேதி ஞாயிறு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை ராமலாலா அபிஷேகம் நடைபெற்றது.
ராம்லாலாவின் அலங்காரம் காலை 10.40 மணி முதல் 11.45 மணி வரை நடைபெற்றது. ஸ்ரீ ராம்லாலா பிறந்த மதியம் 12:00 மணிக்கு ஆர்த்தி மற்றும் சூரிய திலகம் வழிபாடு நடைபெற்றது. விழாவில் சூரியனின் கதிர்கள் ராம்லாலாவின் நெற்றியில் ஒளிரும் அற்புத காட்சியை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். இதற்காக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படிருந்தது. நாடு முழுவதும் ராம நவமி இன்று (ஏப்ரல் 06) விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனால் அயோத்தியில் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ராம நவமியை முன்னிட்டு, ராமர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் சரயு நதியில் புனித நீராடினர். பக்தர்களுக்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.