தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் நடும் விழா நடந்தது.
தஞ்சாவூர், பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 23ம் தேதி தேதி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் காலை,மாலை சுவாமி வீதியுலா நடைபெறு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 7ம் தேதி காலை நடைபெற உள்ளது. தேரை அலங்கரிப்பதற்காக, இன்று காலை, சிவச்சாரியார்கள் தேருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பந்தக்கால் நட்டனர். இதில், அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா, கோயில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணிப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர், தேர் அலங்கார பணிகளை பணியாளர்கள் துவங்கினர். தேரின் சாதாரண உயரம் 19 அடி, அகலம் 18 அடியாகும். ஆனால், தேர் அலங்காரம் செய்யப்பட்டவுடன் 50 அடியாக காணப்படும். இதை போல், தேர் சாதாரண எடை 40 டன், அலங்காரம் செய்யப்பட்டவுடன் 43 டன் எடையாக இருக்கும் என கோவில் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.