திருப்பூர்; அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம் சார்பில், 63 நாயன்மார்கள் மண்டபத்தில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா நடந்து வருகிறது. இன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விமரிசையாக நடந்தது. விஸ்வேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள, 63 நாயன்மார்கள் மண்டபத்தில், அர்த்தஜாம பூஜை அடியார்கள் திருக்கூட்டம், மாணிக்கவாசகர் திருக்கூட்டம் சார்பில், சிறப்பு வழிபாடு நடந்தது. சிவாச்சாரியார்கள், 63 நாயன்மார்களுக்கும் அபிஷேகம் செய்து, அலங்காரபூஜை செய்தனர். சிவனடியார்கள், திருத்தொண்டத்தொகை, திருவாசகம் உள்ளிட்ட திருமுறை பதிகங்களை பாராயணம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 9ம் தேதி மதியம், வாசவி மண்டபத்தில், மகேஸ்வர பூஜையும், அன்னம்பாலிப்பும் நடக்கும். முன்னதாக, செஞ்சேரிமலை முத்து சிவராமசாமி அடிகளாரின் அருளாசி நடைபெற உள்ளதாக, சிவனடியார்கள் தெரிவித்துள்ளனர்.