3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால விசித்திரமான ஓவியங்கள் கண்டுபிடிப்பு



கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை அருகே, 3,000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால விசித்திரமான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 


பெரியார் பல்கலைக்கழகம் தொழில்முறை பயிற்சி மற்றும் முதுகலை ஆய்விற்காக, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை முதுகலை மாணவி சத்யா மற்றும் இளங்கலை மாணவர்கள் சிவசங்கர், நேதாஜி, ரிஸ்வான், ஜாகீர்ஷன், ராமன் ஆகியோர், பேராசிரியர் வெங்கடேஸ்வரன் தலைமையில் கள ஆய்வு மேற்கொண்டதில், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கொப்பக்கரை பஞ்., சூலகுண்டா முனியப்பசாமி கோவிலையொட்டிய கெவிகுண்டு என்ற பாறையில், 4 தொகுதிகளாக உள்ள, 3,000 ஆண்டு பழமையான பெருங்கற்கால விசித்திரமான ஓவியங்களை கண்டறிந்துள்ளனர். 


இது குறித்து, பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது: முதலாவது ஓவிய தொகுப்பு, மூத்தோர் வழிபாட்டை குறிக்கும் ஓவியம். இதில், 3 மனித உருவங்களுடன் வடிவியல் உருவமும், சூலம் போன்ற மற்றொரு குறியீடும் உள்ளது. அருகில், கிடந்த நிலையில் மனித உருவமும், வடிவியல் உருவமும், கிடந்த நிலையில் பாண்டில் விளக்கு ஒன்றும் வரையப்பட்டுள்ளது. இரண்டாவது ஓவிய தொகுப்பில், 3 மனித உருவங்கள் உள்ளன. அதில், வலது, இடது புறத்தில் பெண் உருவங்களும், நடுவில் ஒரு ஆண் உருவம் மற்றும் ஒரு குழந்தையின் உருவம் உள்ளது. ஆண் உருவத்தின் இடதுபுறம் ஒரு சடங்கு பொருள் போன்ற அமைப்பும், ஆண் உருவத்தின் கை, கால்களில், 6 விரல்கள் மற்றும் பெண்ணின் கால்களும் விரித்த நிலையில் உள்ளது. இவ்வாறு விரித்த நிலையில் இருக்கும் மனித உருவங்கள் ஒரு சடங்கு நிகழ்வை குறிக்கலாம். 


மூன்றாவது ஓவிய தொகுப்பில், ஒரு மனித உருவமும், வடிவியல் குறியீடுகளும், சிந்துவெளி கீறல் குறியீடுகள் என மொத்தம், 7 உருவங்கள் ஒரே நேர்க்கோட்டில் இடம் பெற்றுள்ளன. அருகில் சிந்துவெளி கீறல் குறியீட்டை போல ஒரு குறியீடும், சூல குறியீடும் உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த, 3வது ஓவிய தொகுப்பானது, தாந்திரீகம் மற்றும் சடங்கு நிகழ்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளது. 


நான்காவது ஓவிய தொகுப்பில், கெவிக்கொல்லை பாறைக்கு, 200 அடி துாரத்தில் இரும்புக்கால ஓவியத்தை கண்டறிந்துள்ளனர். அதை சுற்றியுள்ள நிலத்தில் கறுப்பு, சிவப்பு பானை ஓடுகள் மற்றும் இரும்பு கழிவுகளும் கிடைத்தன. இதன்மூலம் இப்பகுதி, 3,000 ஆண்டுகளுக்கு முன் மக்களின் வாழ்விடமாக இருந்துள்ளதை அறியலாம்.  இங்குள்ள ஓவியங்களில் மனித உருவங்களின் கைகளில் ஆயுதங்களுடன் இருப்பதாலும், இதன் அருகே சடங்கு பொருட்கள் காணப்படுவதாலும், இந்த ஓவியமானது ஒரு வேட்கை காட்சியையோ அல்லது வேட்டைக்கு பிறகு நடத்தப்படும் சடங்கு நிகழ்ச்சியையோ குறிக்கலாம். ஒட்டுமொத்த ஓவியங்களும் சேர்ந்து ஆண் சக்தி, இனப்பெருக்கம், வேட்டை காட்சிகள், சிந்துவெளி குறியீடுகள் மற்றும் நம் முன்னோர்களின் சடங்குகளின் வெளிப்பாடுகளை காட்டுகிறது. 


இவ்வாறு, அவர் கூறினார்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்