திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் உள்ள புகழ்பெற்ற அருள் தரும் கோவர்த்தனாம்பிகை உடனமர் அருள்மிகு உத்தம லிங்கேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பவுர்ணமி தேர் திருவிழா அடுத்த மாதம் மே ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.
விழாவையொட்டி, கோவிலில் இன்று 25 ம் தேதி சனிக்கிழமை காலை கொடியேற்றம், நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் யாகம் வளர்க்கப்பட்டு, கோவர்த்தனாம்பிகை மற்றும் உத்தமலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சோமாஸ் கந்தர் தாயாருடன் சப்பரத்தில் மேளம் தாளம் முழங்க திரு வீதி உலா வந்தார். நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் குழு தலைவர் மனோகரன் மற்றும் அறங்காவலர்கள், பொது மக்கள், பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவு 9:00 மணிக்கு மண்டப கட்டளை நிகழ்ச்சி நடைபெற்றது. 29 ம் தேதி புதன்கிழமை இரவு 8 : 00 மணிக்கு சுவாமி ரிஷப வாகனத்தில் காட்சியளித்தல், 30 ம் தேதி வியாழக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெறுகிறது. மே மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரண்டாம் தேதி இரவு 8:00 மணிக்கு பதிவேட்டை, சாமி குதிரை வாகனத்தில் செல்லுதல், மூன்றாம் தேதி காலை 9:00 மணிக்கு சாமி சிறப்பு தரிசனம், நடராஜர் அபிஷேகம், நான்காம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீருடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் அறங்காவலர்கள் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் சுந்தர முத்து, திருமூர்த்தி, பானுமதி, ஜெகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.