பதிவு செய்த நாள்
18
ஜன
2020
11:01
கிருஷ்ணகிரி: எருது விடும் விழாவையொட்டி, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காணும் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி லைன்கொல்லையில் எருது விடும் விழா நடந்தது. நேற்று காலை, கிராமத்தின் நடுவே அங்காளம்மன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமியை ஊர்வலமாக கொண்டு வந்தனர். அவர்களுடன் பூசாரி கரகம் சுமந்தும், பக்தர்கள் அலகு குத்தியும் ஊர்வலமாக சென்றனர். ஏழுபிள்ளை மாரியம்மன் கோவில் அருகில், சுவாமி ஊர்வலம் வந்தபோது, பக்தர்கள் தரையில் படுத்துக் கொண்டனர். அவர்கள் மீது பூசாரி நடந்து சென்று, ஆசி வழங்கினார். மாலை, 5:00 மணிக்கு ஏழுபிள்ளை மாரியம்மன் கோவில் முன்பு, சிப்பாயூர், லைன்கொல்லை, மேல்பட்டி, பெருமாள் நகர் உள்ளிட்ட, 18 கிராமங்களை சேர்ந்த எருதுகளை அழைத்து வந்து பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோவிலை சுற்றி எருதுகளை ஓட விட்டனர். எருது விடும் விழாவை காண, ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை, 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.