பதிவு செய்த நாள்
13
ஆக
2020
08:08
சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில், ஆடி கிருத்திகை விழா, நேற்று, பக்தர்கள் இன்றி கொண்டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற கோவில்களில், ஆன்-லைன் வாயிலாக, விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.சூரனை அழித்து, தேவர்களைக் காத்த, ஆறுமுக பெருமானை வளர்த்த கார்த்திகை பெண்களைப் போற்றும் விதமாக, கிருத்திகை விரத நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. முருகப் பெருமானுக்கான, பிரதான விழாவாக கருதப்படும் ஆடி கிருத்திகை, முருகன் கோவில்களில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்தாண்டு, ஊரடங்கு காரணமாக, பிரசித்தி பெற்ற கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.இதனால், பக்தர்கள் இன்றி, கோவில்களில் கிருத்திகை விழா நடத்தப்பட்டது.கோவில்களில், விடியற்காலை முதல் இரவு வரை, சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தன. பல கோவில்களில் நடந்த விழா, ஆன்-லைன் வாயிலாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.குன்றத்துார், சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு மகா அபிஷேகம், தங்க கவசம், புஷ்ப அலங்காரம், மோட்ச தீபாராதனை வழிபாடு நடந்தன.அதேபோல, சென்னை, கந்தக்கோட்டம், பெசன்ட் நகர் அறுபடை வீடு, குரோம்பேட்டை, குமரக்கோட்டம், திருப்போரூர், சிறுவாபுரி, வல்லக்கோட்டை, உள்ளிட்ட முருகன் கோவில்களிலும், ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது.சமீபத்தில், சென்னை மாநகராட்சியிலும், சிறிய கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.அதை தொடர்ந்து, சிறிய பிள்ளையார் கோவில்களில் உள்ள முருகன் சன்னதிக்கு, சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. இதில், அந்தந்த பகுதியைச் சேர்ந்த, பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். -- நமது நிருபர்- -