பதிவு செய்த நாள்
10
ஏப்
2021
01:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் வரும், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டையொட்டி, நடக்கவிருந்த, 1,008 பால்குட ஊர்வலம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலில், இம்மாதம், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டையொட்டி, 1,008 பால்குட ஊர்வலம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டு, அதற்கான பணிகளில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவித்துஇருந்தன. இதில், கோவில்களில் திருவிழாக்கள், ஊர்வலம் மற்றும் கூட்டம் அதிகளவில் கூடக்கூடாது என, பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து, கலெக்டர் பொன்னையா உத்தரவின்படி, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம், வரும், 14ம் தேதி நடைபெற இருந்த, 1,008 பால்குட ஊர்வலம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.அதே போல், முருகன் கோவிலின் துணை கோவிலான மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டு நடைபெற இருந்த, 1,008 பால்குட ஊர்வலம் மற்றும் அபிஷேகமும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.