பதிவு செய்த நாள்
15
மே
2021
05:05
கோத்தகிரி: கோத்தகிரி உட்பட மாவட்டம் முழுவதும் படுகர் தினவிழா, மிக எளிமையாக நேற்று கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுக சமுதாய மக்கள், ஆண்டுதோறும் மே மாதம், 15ம் தேதியை படுகர் தினமாக கடைப்பிடித்து வருகின்றனர். நடப்பாண்டு, கொரோனா தொற்று காரணமாக, அனைத்து கிராமங்களிலும், மிக எளிமையாக விழா கொண்டாடப்பட்டது. அனைத்து கிராமங்களிலும், வெள்ளை கொடியேற்றி, படுகர்களின் தந்தை என அழைக்கப்படும் ராவ்பகதூர் ஆரிகவுடர் படத்திற்கு சமூக இடைவெளியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவரும், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்பு வழங்கி, படுகர் தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். பெரும்பாலான கிராமங்களில், சமூக இடைவெளியில் கலாச்சாரம் நடனம் இடம்பெற்றது. பொரங்காடு, தொதநாடு, மேற்குநாடு மற்றும் குழந்தை சீமை சமுதாயத் தலைவர்கள், ஊர் பெரியோர்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.