செஞ்சி : மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியின்றி கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக்கவச அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடந்தது.இரவு 7:00 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களைப் பாடினர். 8:00 மணிக்கு மகா தீபாரதனை நடந்தது.இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர். கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. வழக்கம் போல் மூலவர் சுவாமி தரிசனம் நடந்தது.