பதிவு செய்த நாள்
10
ஜூலை
2012
10:07
திருவண்ணாமலை: ஹிந்து கோவில்களில் ஸ்வாமி கும்பிட கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி, தமிழகம் முழுவதும் வரும் 22ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என, ஹிந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் கூறினார். திருவண்ணாமலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஹிந்து முன்னணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை அடி அண்ணாமலை ஆதி அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடத்த ஏற்பாடு செய்த ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம்.ஹிந்து கோவில்களில் ஸ்வாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி, வரும் 22ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களிலும், ஒன்றிய தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இரு மாதங்களுக்கு முன், கோவில்களில் ஸ்வாமி கும்பிட கட்டணம் வசூலிக்கக்கூடாது என, வலியுறுத்தி ஹிந்து முன்னணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.இந்த கையெழுத்துகள் அனைத்தும் ஆர்ப்பாட்ட தினத்தன்று கலெக்டர் மூலமாக தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். திருவண்ணாமலை கோவிலை சுற்றிலும், மலையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கிரிவல பக்தர்களின் வசதிக்காக தனிப்பாதை அமைத்து தர வேண்டும், திருவண்ணாமலை மலையை பக்தர்கள் சிவனாக வழிபடுகிறார்கள். ஆனால், அந்த மலையில் அடிக்கடி தீ வைப்பு சம்பவங்கள் நடக்கிறது. மலைமீது தீ வைப்பவர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகமும், போலீஸ் துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இனி மேலாவது இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.