பதிவு செய்த நாள்
17
மே
2022
08:05
வாரணாசி : உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியை சீல் வைக்க, வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., அரசு அமைந்துஉள்ளது.
இங்கு, வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவிலை ஒட்டி, ஞானவாபி மசூதி உள்ளது. இதன் ஒருபக்க வெளிப்புற சுவரில், ஹிந்து கடவுளின் உருவங்கள் உள்ளன. இவற்றை வழிபட இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.இந்நிலையில், ஹிந்து கடவுள் உருவங்களை தினமும் வழிபட அனுமதிக்கக் கோரி, ஹிந்து பெண்கள் சிலர் மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில், வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வீடியோ பதிவு : இதை ஏற்ற நீதிமன்றம், மசூதி வளாகத்தில் ஆய்வு செய்து, வீடியோவாக பதிவு செய்து தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதற்காக, ஐந்து பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்றும் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், மசூதியில் உள்ள சிறிய குளத்தில், சிவலிங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை, சீல் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்தப் பகுதிக்குள் யாரும் நுழையாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும்படி, மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் மற்றும் சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வாரணாசி பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
பாதுகாப்பு: மசூதி வளாகத்துக்குள் ஹிந்துக்கள் வழிபடும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரச்னைகள் ஏற்படுவதை தடுப்பதற்காக, மசூதியை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ஆய்வு குறித்து, வாரணாசி மாவட்ட கலெக்டர் கவுசல் ராஜ் சர்மா கூறியதாவது:நீதிமன்றம் நியமித்த குழுவினரின் ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. அனைவரும் தங்களுடைய ஆய்வு குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர். தங்களுடைய அறிக்கையை அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வர்.இந்தக் குழுவினர், ஆய்வு குறித்த எந்தத் தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது.
அதனால், ஆய்வு குறித்து யாராவது ஏதாவது கூறினால், அதன் நம்பகத்தன்மைக்கு நாங்கள் பொறுப்பல்ல. ஆய்வின் முழு தகவலும் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கியது. இவ்வாறு அவர் கூறினார். மசூதி வளாகத்தை ஆய்வு செய்வதற்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்தது. அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க மறுத்தது; அதே நேரத்தில் வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக கூறியுள்ளது. அதன்படி, இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. அறிக்கையை, 17 ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.இதையடுத்து, மசூதியில் ஆய்வு பணி துவங்கியது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மசூதியில் கடந்த சில நாட்களாக ஆய்வு பணி அமைதியாக நடந்தது. இதுவரை அனைத்து ஆய்வுப் பணி முடிந்துள்ளதாக நிலையில் ஆய்வுக் குழுவினர் திட்டமிட்டபடி இன்று (மே. 17) சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிழ்ச்சியான செய்தி: ஆய்வுக் குழுவின் அறிக்கை குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளதாவது:இது நல்ல செய்தி. தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதை விட பெரிய விஷயம் வேறு ஏதும் இருக்க முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவுகளையும், ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளையும் ஏற்று நடப்போம்.மசூதி வளாகத்துக்குள் சிவலிங்கம் இருப்பதை, ஆய்வுக் குழுவினர் உறுதி செய்துள்ளனர். சிவ பக்தனாக, அங்கே உள்ளே என்ன இருக்கும் என்பது நமக்கு தெரியும். எவ்வளவு நாளைக்கு மூடி மறைத்தாலும், உண்மை ஒரு நாள் தெரிய வரும் என்பது உறுதியாகி உள்ளது. புத்த பூர்ணிமா தினத்தில், இந்த நல்ல செய்தி வந்துள்ளது, நம் ஹிந்து கலாசாரம், பாரம்பரியத்துக்கு கிடைத்துள்ள தெய்வீகச் செய்தியாகவே பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.