பதிவு செய்த நாள்
18
மே
2022
04:05
சென்னை : ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துக்கள் விபரம் அடங்கிய புத்தகத்தை, முதல்வர் ஸ்டாலின், நேற்று வெளியிட்டார். முதல் பிரதியை, அமைச்சர் சேகர்பாபு பெற்றுக் கொண்டார். முதன்முதலாக, சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான, 250 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு சொத்துக்கள்,2021 ஜூன் 6ம் தேதி மீட்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில், கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன.மீட்கப்பட்ட சொத்து விபரங்கள் அனைத்தையும் தொகுத்து, அழியாத ஆவணமாக, அனைவரும் அறிந்து கொள்வதற்காக, இப்புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது.இதில், ௨௦௨௧ மே 7 முதல், 2022 மார்ச் 31 வரை, மீட்கப்பட்ட கோவில் சொத்துக்களின் விபரம், கோவில் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள், மீட்கப்பட்ட நிலம், மனை, கட்டடம், குளம் விபரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. எதிர்காலத்தில் கோவில் சொத்துக்களை பாதுகாக்க, இப்புத்தகம் அடிப்படை ஆதாரமாக விளங்கும். மீட்கப்பட்ட சொத்துக்கள், ரோவர் கருவிகளால் அளவீடு செய்யப்பட்டு, எச்.ஆர்.சி.இ., என்ற பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் நடப்பட்டு, வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.நிகழ்ச்சியில், அறநிலையத் துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா ஆகியோர் பங்கேற்றனர்.