பதிவு செய்த நாள்
01
ஆக
2012
10:08
பூணூல் அணியும் சடங்கான உபநயனம், ஆவணிஅவிட்டமான இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதுகுறித்து காஞ்சிப்பெரியவர் சொல்வதைக் கேளுங்கள்.
உபநயனம் என்பது குருகுலவாசத்துக்கு முதல்படி. "உபநயனம் என்பதற்கு குருவுக்குக் கிட்டே கொண்டு போய்விடுவது என்று அர்த்தம். புத்தி சம்பந்தமான வேதவித்தையை படிக்கும்போது அகங்காரம் வந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தை விட்டுக் கண்டிப்பிலே ஒழுங்குக்குக் கொண்டு வருகிற குருவிடம் கொண்டு போய்விடச் சொல்லி இருக்கிறது. இரண்டு தெய்வக்குழந்தைகள் மநுஷ்ய ரூபத்தில் அவதாரம் பண்ணினபோது உபநயன விசேஷத்தாலேயே தங்கள் அவதார காரியத்தைப் பண்ணிக் காட்டினர். வேதம் மதம் நலிவடைந்தபோது புத்துயிர் கொடுத்த சங்கரரும், ஞானசம்பந்தரும் தான் அந்தக் குழந்தைகள். சம்பந்த மூர்த்தி சுவாமி பால்யத்திலேயே உபநயனம் பெற்ற நாலுவேதங்களையும் அத்யயனம் பண்ணினார் என்று பெரியபுராணத்தில் சொல்லியிருக்கிறது. பாலப்பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்து விட்டால் பசுமரத்தாணியாக அது பதியும். காயத்ரீயானது மனோசக்தி, தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் தரவல்லது. இந்த ஜபத்தாலேயே குழந்தைகளுக்கு நல்ல சித்தம், புத்தி தீட்சண்யம், சரீர புஷ்டி எல்லாம் உண்டாகும். பூணூல் அணிவதோடு மட்டுமல்லாமல் சந்தியா வந்தனமும், வேதஅப்யாசமும் பண்ணவேண்டியது அவசியம். இவ்வாறு சொல்கிறார் பெரியவர்.
ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் காயத்ரிஜபம் பின்பற்றப்படுகிறது. இதுபற்றி சுவாமி சிவானந்தர் சொல்வதைக் கேளுங்கள். காயத்ரி மந்திர ஜபதினம் மிகவும் புனிதமானது. பாராயணம் செய்பவரைக் காக்கும் கேடயமாகவும், கோட்டையாகவும் விளங்குகிறது. காயத்ரி என்றால் "ஜபிப்பவனைக் காப்பது என்று பொருள். மனிதனை கடவுளாக்கி உயர்ந்த ஆன்மிக அறிவையும், ஒளியையும் நல்கும் தெய்வீகசக்தியே காயத்ரி. உங்களுக்கு விருப்பமான எந்த வடிவத்தில் கடவுளை வழிபட்டாலும் காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்யலாம்.
காயத்ரி ஒரு பெண் தெய்வமாகக் கருதப்படுகிறாள். கடவுளை அன்னையாக வழிபடுவோர் இவ்வாறு எண்ணுகின்றனர். மந்திரங்களின் மகுடமான காயத்ரியை, ""ந காயத்ர்யா: பரோ மந்த்ர: என்று குறிப்பிடுவர். இதைவிடச் சிறந்த மந்திரம் வேறு கிடையாது என்பது பொருள்.
""ஓம் பூர் புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
இந்த பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தவரும், ஜோதி வடிவானவரும், அனைத்து பாவத்தையும், அறியாமையையும் அகற்றுபவருமான மேலான தெய்வத்தின் மகிமையை நாம் தியானிக்கிறோம். அவர் நம் அறிவைத் துலக்குவாராக என்பது இதன் பொருள்.