பதிவு செய்த நாள்
08
ஆக
2022
11:08
சென்னை: கங்கோத்ரி ஸ்ரீமடத்தின் மடாதிபதி நாராயண தீர்த்த மகா சுவாமிகளின் சாதுர்மாஸ்ய மகோற்சவத்தில் சர்வ சாக்கை சம்மேளன நிகழ்ச்சி ஆகஸ்ட் 2ம் தேதி துவங்கியது.
கங்கோத்ரி ஸ்ரீமடத்தின் மடாதிபதி நாராயண தீர்த்த மகா சுவாமிகள் சென்னை, நங்கநல்லுாரில் உள்ள மடத்தில், கடந்த மாதம் 13ம் தேதி முதல், செப்., 10ம் தேதி வரை, 47வது சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகிறார். இந்த வைபத்தில், சர்வ சாக்கை சம்மேளனம் எனும் பெயரில், 21 சாக்கைகள் பாராயணம் செய்யும் நிகழ்வு ஆகஸ்ட் 2ம் தேதி துவங்கி, 8ம் தேதி வரை நங்கநல்லுார், அய்யப்பன் கோவிலில் நடத்தப்படுகிறது. துவக்க நாளான ஆகஸ்ட் 2ம் தேதி நாராயண தீர்த்த மகா சுவாமிகள், சச்சிதானந்த மகா சுவாமிகள், விஸ்வாநந்த தீர்த்த மகா சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் அனைத்து சாகைகளுடைய பாராயணம் துவங்கியது. இதில், நாராயண தீர்த்த மகா சுவாமிகள் அருளாசி வழங்கியதாவது:
இது வேத பூமி பாரதம். தியானத்திற்கும் வேதத்திற்கு வித்தியாசம் கிடையாது. விடுதலை என்பது ஜென்ம பந்ததில் இருந்து விலகுவது. ஆதிசங்கரர் நமக்கு அருளியது அத்வைத சித்தாந்தம். பிரம்மத்தை தவிர மற்றவை உண்மையில்லை. உண்மை என்பது எக்காலத்திலும் மாற்றம் இன்றி நிலைத்து நிற்பது. உலகில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உற்பத்தி செய்தவர். மற்றொன்று உற்பத்தியானது. இதில், மாயையானது உற்பத்ததியானது. பல விதமாக பார்ப்பது மாயை. ஒரே விதமாக பார்ப்பது உண்மை. ஹிந்து மதம் என்று கூறியவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால், அதற்கு சனாதன தர்மம் என்று பெயர். வேதத்தற்கு, உலகளாவிய தர்மம் என்று பெயர். உலக அளவில் சனாதன தர்மம் மட்டுமே இருந்தது. அதன் பிறகுதான் மற்ற மதங்கள் தோன்றின. இறைவனுடன் இணைந்து இருப்பது மோக்ஷம், யோகம்.
ஞானம் கிடைக்க வேதங்களை பாராயணம் செய்ய வேண்டும். வியாசர் நமக்கு நான்கு வேதங்களை அளித்துள்ளார். அவற்றில் நிறைய சாக்கைகள் இருந்தன. காலப்போக்கில் அவை அழிந்து பாரதத்தில், 21 சாக்கைகள் மட்டுமே நிலைத்துள்ளது. இந்த சாக்கைகள் புனரமைக்கும் வகையில், சர்வ சாக்கை சம்மேளனத்தை நடத்துகிறோம். இதனை, 42 வேத விற்பன்னர்கள் நடத்துகின்றனர். இதில், அனைவரும் பங்கேற்க வேண்டும். விரைவில் தமிழகத்தில் அனைத்து சாக்கைகளையும் ஒருங்கிணைத்து போதிக்கும் வகையில் வேதத்திற்கான பல்கலைக் கழகம் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அருளாசி வழங்கினார்.
சாக்கைகள் குறித்து பிரவீன் சர்மா கூறியதாவது: அனைத்திற்கு ஆதாரம் வேதம். அதனை தமிழில் மறை என்று கூறுகிறோம். வேதத்தை யார் படைத்தார் என்று தெரியாது. வேததிதற்கு நுால் இல்லை. குருதான் சிஷ்யருக்கு அருளுவார். முன்பு வேதம் என்றால் ஒன்றுதான். அது பகவானின் மூச்சுக் காற்று. பின்நாளில் வியாசரின் கருணையால் வேதம் நான்காக பிரிக்கப்பட்டது. வேதங்களில் பல சாக்கைகள் எனும் பல பிரிவுகள் கொண்டது. முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாக்கைகள் இருந்தது. அது, 132 ஆக குறைந்தது. தற்போது, 21 சாக்கைகள் மட்டுமே எஞ்சியுள்ளது. இருக்கும் சாக்கைகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் சர்வ சாக்கை சம்மேளனம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விழா நிகழ்ச்சிகள்:
08.08.22 – தி்ங்கள் கிழமை – ஸ்ராவண 3வது சோமவாரம்
11.08.22 – வியாழக்கிழமை – ருக், யஜீர் உபாகர்மா (ஹயக்கீவ ஜெயந்தி)
12.08.22 – வெள்ளி கிழமை – காயத்தி ஜெபம்
15.8.22 – திங்கள் கிழமை – 4வது சோம வாரம்
19.08.22 – வெள்ளிக்கிழமை – கோகுலாஷ்டமி
22.08.22 – திங்கள் கிழமை – 5வது சோம வாரம்
30.08.22 – செவ்வாய் கிழமை – ஸாம உபாகர்மா
31.08.22 – புதன் கிழமை – விநாயக சதுர்த்தி
01.09.22 – வியாழக்கிழமை – ருஷி பஞ்சமி
07.09.22 – புதன் கிழமை – ஸ்ராவண தூவதசி, வாமன ஜெயந்தி
10.09.22 – சனிக்கிழமை – உமா மகேஸ்வர விரதம், சாதுர் மாஸ்ய பூர்த்தி.