150வது பிறந்த தினம் அரவிந்தர் அறையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2022 08:08
ஆரோவில்: மகான் அரவிந்தரின் 150 ஆவது பிறந்தநாள் விழாவை யொட்டி அவரது அறையை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.
1872 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தவர் அரவிந்தர் என்று அழைக்கப்படும் அரபிந்தோ கோஷ். இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக திகழ்ந்து, அதன் பிறகு ஆன்மிகத்தை தழுவினார். இவருடன் அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்பாசும் அரவிந்தரின் ஆன்மீக கடமைகளை இணைந்து செயலாக்கம் செய்தார்.அரவிந்தர் 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி 78 வயதில் சித்தியடைந்தார். ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி ஒயிட் டவுன் மரைன் வீதியில் உள்ள அரவிந்தர் ஆசிரமத்தில், அரவிந்தர் பயன்படுத்திய அறையை தரிசனம் செய்வதற்கு பார்வையாளர்களுக்கு ஆறு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அரவிந்தரின் 150 வது பிறந்த நாளை யொட்டி அரவிந்தர் ஆசிரமம், ஆக.15 தேதி சுதந்திர தினத்தன்று காலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டு, ஆறு மணிக்கு தியான நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அரவிந்தர் அறையை மாலை ஆறு மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல் ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்தீர் மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் அதிகாலை4:30 மணியிலிருந்து 6:30 மணி வரை போன் பயர் நிகழ்ச்சியும் நடக்கிறது.