பத்மனாபபுரத்தில் இருந்து மன்னர் உடைவாள் ஏந்தி நவராத்திரி பவனி புறப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23செப் 2022 06:09
நாகர்கோவில்: மன்னர் உடைவாள் ஏந்தி பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி இன்று காலை புறப்பட்டது. இதில் தமிழக – கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர். திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் கவியரசர் கம்பர் வழிப்பட்ட சரஸ்வதிதேவி கோயில் உள்ளது. மன்னர் காலத்தில் இங்கு நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட போது, மன்னர் உத்தரவின் பேரில் சரஸ்வதி விக்ரகம் திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மன்னர் காலத்துக்கு பின்னரும் இந்த மரபு மாறாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 26–ம் தேதி நவராத்திரி விழாவுக்காக நேற்று காலை பத்மனாபபுரத்தில் இருந்து பவனி புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட யானை மீது சரஸ்வதி விக்ரகம் ஏற்றப்பட்ட போது போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பல்லக்கில் வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை எழுந்தருளினர். அரண்மனை முன்புறம் வந்ததும் பவனியில் செல்பவர்களுக்கு ‘பிடிகாணிக்கை’ (கை நிறைய நாணயம்)வழங்கப்பட்டது. தொடர்ந்து பவனி புறப்பட்டது. முன்னதாக அரண்மனை உப்பிரிகை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னர் உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார், கேரள தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் வழங்க அவர் அதை தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் கொடுத்தார். அவர் குமரி மாவட்ட தேவசம்போர்டு இணைஆணையர் ஞானசேகரிடம் ஒப்படைத்தார். இந்த வாளை தேவசம்போர்டு ஊழியர் பவனியில் எடுத்து சென்றார். நேற்று குழித்துறையில் தங்கிய பவனி, இன்று கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் தங்கி நாளை திருவனந்தபுரம் சென்றடையும். 26–ம் தேதி நவராத்திரி பூஜை தொடங்கும். இரு மாநிலங்களை இணைக்கும் பண்பாட்டு நிகழ்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.