பதிவு செய்த நாள்
24
டிச
2012
01:12
கர்த்தரது அளவற்ற கிருபையினால், நாம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறோம். வருஷா வருஷம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆவலோடு எதிர்பார்க்கிறார்களே தவிர, கிறிஸ்துமஸ் பண்டிகை, நமக்கு கொடுக்கும் போதனைகளை பெரும்பாலோனோர் கற்றுக் கொள்வதில்லை. இந்த பண்டிகையின் போது மூன்று விஷயங்களை நாம் சிந்திப்போம். கன்னி மரியாள் நமது ஆண்டவருக்குத் தாயானவர் என்றாலும், அவர் மன்னன் அகுஸ்துராயனால் பிறப்பிக்கப்பட்ட கட்டளைக்கு கீழ்ப்படிந்து நாசரேத்திலிருந்து பெத்லகேம் சென்றார். தேவன், தமது அடியாளுக்காக இந்த கட்டøளையை நிறுத்தவில்லை. அச்சமயம் கன்னி மரியாள் நிறைமாத கர்ப்பவதி. ஆகவே, இரண்டு மாதம் கழித்து ராயன் இந்த உத்தரவை போடும்படி தேவன் நியமித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு அவர் செய்யவில்லை. கன்னி மரியாளும் தனது உரிமைக்காக வாதாடவில்லை. கோவேறு கழுதையில் 90 மைல் சவாரி செய்ய வேண்டியிருந்தது. தமது குமாரனை பெற்றெடுக்கும் தாயாருக்காக ஒரு ரதத்தைக் கூட தேவன் ஏற்பாடு செய்யவில்லை. தங்குவதற்கு சத்திரத்தில் கூட இடம் தரவில்லை. மாட்டுத் தொழுவத்தில் தான் இடம் கொடுத்தார். அதற்காக மரியாளும் வாதாடவில்லை.
நம்மில் அனேகர், தேவன் எனக்கு பணவசதி கொடுக்கவில்லை, பதவி கொடுக்கவில்லை, என்றெல்லாம் முணுமுணுப்பது உண்டு. ஆனால் நாம் இங்கு காண்பது என்ன? பரிசுத்த மரியாளுக்கு பேறு கால சமயத்தில் உதவி செய்ய ஒருவரும் இல்லை. தாயே, பிள்ளையைப் பெற்றெடுத்து துணிகளில் சுற்றி முன்னணையிலே கிடத்தியதாக பார்க்கிறோம். நமது வீட்டில் பிள்ளை பிறந்தால் அதை நமது பணக்கார நண்பர்களுக்குச் சொல்லி அனுப்புவோம். பெரிய பதவியில் உள்ளவர்கள், பணக்காரர்கள் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். அதை பெருமையாக நாலுபேரிடம் சொல்லிக் கொள்வோம். ஆனால், தேவன் தமது ஒரே பேறான குமாரன் பிறந்ததை சாதாரண எளிய மேய்ப்பருக்குச் சொல்லும்படி செய்கிறார். அவர்கள் வந்து பார்த்ததை ஒரு கவுரவமாக நினைத்தார். மனுக்குலம் ரட்சிக்கப்பட வேண்டுமானால், தேவகுமாரன் தமது மகிமையுள்ள தெய்வீக மேன்மையை தியாகம் செய்து, பூலோகத்தில் மனிதனாகப் பிறக்க வேண்டும். எல்லாரும் காணவும், பழகவும் வேண்டுமானால் எளிய குடும்பத்தில் பிறக்க வேண்டும். மனுக்குலம் எளிமையை, துன்பத்தைச் சகிக்கும் தன்மையை, பிறரது அநியாயங்களைப் பொறுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டுமானால் அவர்களுக்கு முன்மாதிரியாக வேண்டும். தேவகுமாரன் இதை அன்போடு ஏற்றுக் கொண்டு தியாகமூர்த்தியாக வெளிப்பட்டார். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் சகோதரனே! சகோதரியே! உலகம் ரட்சிக்கப்பட , மற்றவர்கள் பாக்கிய நிலையை அடைய, உன்னிடம் தியாக சிந்தனை உண்டா? கிறிஸ்துமஸ் பண்டிகை கற்றுக் கொடுக்கும் தாழ்மையை, எளிமையை, தியாக சிந்தையை இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையிலாவது ஏற்றுக் கொள். கர்த்தரது ஆசியைப் பெறுவாய்.