பதிவு செய்த நாள்
06
பிப்
2013
11:02
பழநி: பழநியில் தைப்பூசத்திருவிழா 10 நாட்கள் கோலகலமாக நடந்து நிறைவடைந்தாலும், பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பாதயாத்திரை பக்தர்களின் வருகை குறையவில்லை. ஏராளமானவர்கள் அழகு, காவடிகளுடன் வந்த வண்ணம் உள்ளனர்.பழநிகோயில் தைப்பூசத்திருவிழா பெரியநாயகியம்மண் கோயிலில் ஜன.21ல் கொடியேற்றத்துடன் துவங்கி, திருக்கல்யாணம், தேரோட்டம், தெப்ப உற்சவம் என தொடர்ந்து 10 நாட்கள் கோலகலமாக நடந்து முடிந்தது. அதன்பின், இடைப்பாடி சமூகத்தினர் ஆயிரக்கணக்கனவர்கள் வந்து மலைக்கோயிலில் தங்கி, 20 ஆயிரம் கிலோ பஞ்சாமிர்தம் தயார் செய்து, பால், இளநீர், புஷ்பக் காவடிகள் எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். சேலம், பொள்ளாச்சி, திருப்பூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து. ஆட்டம் பாட்டத்துடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பாதயாத்திரை மட்டுமில்லாமல், மாட்டுவண்டி, வாகனங்களிலும் வந்தவண்ணம் உள்ளனர். இவர்களில் பெரும்பலான பக்தர்கள் மிகவும் நீளமான அழகு குத்தியும், காவடிகளுடன் ஆட்டாமடியவாறு கிரிவீதியை சுற்றி வலம் வருகின்றனர்.
வசூல்: கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியே 82 லட்ச ரூபாயை எட்டியது.கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு மலைகோயில் கார்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. ரொக்கம் ஒரு கோடியே 80 லட்சத்து 90 ஆயிரத்து 440 ரூபாய் இருந்தது. தங்கம் 807 கிராம். வெள்ளி 10 ஆயிரத்து 205 கிராம். அமெரிக்கா, சிங்கப்பூர். மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் கரன்சிகள் 180 இருந்தன.தங்கத்தினாலான வேல், திருமாங்கல்யம், செயின், மோதிரம், வெள்ளியினாலான வேல், கொலுசு, ஆள்ரூபம் போன்றவை காணிக்கையாக செலுத்துப்பட்டிருந்தன. ஒரே பக்தர் 164 கிராம் எடையுள்ள தங்க கட்டியை செலுத்தியிருந்தார்.பரிவட்டங்கள், ஏலக்காய் மாலை, கைக்கடிகாரங்கள், மொபைல் போன் உள்ளிட்டவையும் செலுத்தப்பட்டிருந்தது. 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. இன்றும், நாளையும் உபகோயில்கள், நவதானிய உண்டியல்கள் திறக்கப்பட உள்ளது. கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் ராஜமாணிக்கம், திருப்பரங்குன்றம் கோயில் துணை ஆணையர் பச்சையப்பன் உடன் இருந்தனர்.