பதிவு செய்த நாள்
21
பிப்
2013
10:02
கோட்டை போல் மக்களைப் பாதுகாக்கும், கோட்டை மாரியம்மன் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவைமுன்னிட்டு ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாசித்திருவிழாவில் இன்று... காலை 9 மணி: பால்குட, முளைப்பாரி ஊர்வலம், காலை 11 மணி: அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணி: அம்மன் மின்ரதத்தில் ரத பவனி நடைபெறுகிறது.
தல வரலாறு: பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி..திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் விக்ரகமும் மட்டும் இருந்தது. திப்பு சுல்தான் காலத்தில், போர்வீரர்கள், ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை பிரதிஷ்டை செய்தனர். போருக்குச் செல்லும் தங்களுக்கு வெற்றியையும், உயிர் பாதுகாப்பும் தரும் காவல் தெய்வமாக எண்ணி வணங்கினர். காலப்போக்கில், திண்டுக்கல் மக்களின் காவல் தெய்வமாக மாறியது. இக்கோயிலில், மூன்று சிறப்பு வாசல்கள் மூன்று உள்ளது. விழாக்காலங்களில், அம்பாள் பவனி முன்புற வாசல் வழியே செல்லும். பின்புற வாசல் மலைக்கோட்டையை ஒட்டி இருக்கிறது. இந்த அம்மன் சிலையின் அடிப்பகுதி, பூமிக்கு அடியில் அதிக ஆழத்தில் புதைந்துள்ளது.
பிற சந்நிதிகள்: சந்நிதியின் உள்புற நுழைவுவாயிலில் கம்பத்தடி அமைந்துள்ளது. இது தாமிரம் கலந்து செய்யப்பட்டது. அம்மன் சந்நிதியை ஒட்டி முன்புறம் தெற்குப்பக்கம் விநாயகர் சந்நிதியும், வடக்குப்பக்கம் மதுரைவீரன் சுவாமி சந்நிதியும், முன்புற வடக்கில் நவக்கிரங்கள், பின்பக்கம் தென்புறம் முனீஸ்வரர் சந்நிதி, வடபுறம் கருப்பணசாமி சந்நிதி உள்ளது. காளியம்மன், துர்க்கையும் உள்ளனர்.
பிரார்த்தனை : அம்மை, உடல் உறுப்புகள் குறைபாடுகள் நீங்க. தீராத நோய்கள் குணமாக அம்மனை வேண்டுகின்றனர். இதற்காக மஞ்சளும், உப்பும் கொடி கம்பத்தடியில் இடுகிறார்கள். தீச்சட்டி ஏந்திவருவது, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தீபம் ஏற்றி வழிபட குழந்தைபாக்கியம் கிட்டும். பலனடைந்தவர்கள், குழந்தைகளை கரும்பு தொட்டிலில் சுமந்தும், மாவிளக்கு ஏற்றியும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.
தல பெருமை : வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரமாக திண்டுக்கல் உள்ளது. மேற்கு திசையில் மலையும், அதன் மீது கோட்டையும் அமைந்துள்ளது.
300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோட்டை அப்படியே உள்ளது. கோட்டையிலிருந்து பழநிக்கு சுரங்கப்பாதை இருப்பதாகவும், இந்த வழியாக பல முறை திப்புசுல்தான் பழநிக்கு சென்றாகவும் வரலாறு கூறுகிறது. மலைக்கோட்டையின் அழகான பின்ணனியில்தான் இந்த அம்மன் கோயில் இருக்கிறது. பக்தர்களை கோட்டை போல் பாதுகாப்பதால், அம்மனும் கோட்டை மாரியம்மன் எனப்படுகிறாள். இவள் அமர்ந்த கோலத்தில் இத்தலத்தில் எழிலுற காட்சி தருகிறாள். எட்டு கைகளுடன் காட்சி தரும் இவளது வலது கைகளில் பாம்பு, சூலாயுதம், மணி, கபாலமும், இடது கையில் வில், கிண்ணம், பாம்பும் காணப்படுகின்றது.
திருவிழா : மாசிமாத திருவிழா, மாசி அமாவாசை முடிந்த 5-ம் நாள் கொடியேற்றத்துடன் துவங்கும். கொடி ஏற்றும் போது பெண்கள் புனித நீர் அபிஷேகம் நடத்துவர். இதன் மூலம் அம்மன் மழை வள மும், மாங்கல்ய பாக்கியமும் தருவதாக ஐதீகம். விழாக்காலத்தில் சிம்மவாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனங்களில் அம்மன் பவனி வருவாள்.